என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்








இந்தவழிமுறைகளைதொடர்ந்து ஒருமாதம் பின்பற்றிபாருங்கள்.உங்களின் எடைதானாக குறையும்.ஒரு வாரத்திற்கு,அரைகிலோவிலிருந்துஒரு கிலோ வரைஎடை குறைந்தால்,சரியான வழியில்எடையைக்குறைக்கிறீர்கள்என்று அர்த்தம்.

1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவைதவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒருபிடி பிடிக்க நேரிடும்.

2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விடசிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள்சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ்வகைப் பழமாக இருக்கட்டும்.

4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலிப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய்,சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு,வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில்ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளைதவிர்த்து விடுங்கள்.

5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு,கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும்அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி,கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு,கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்புசத்துள்ள டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர்அருந்துங்கள்.

8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின்வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவிவேண்டாம்.

9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:































இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.


இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.




ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ 1டம்ளர் (200 மி.லி)
காலை 8 மணி இட்லி 2 (அ) இடியாப்பம் 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு அரை கப், பொரியல் 1 கப், தயிர் பச்சடி 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ 1டம்ளர் (200 மி.லி)
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2,பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு 1 கப் (அ) கேழ்வரகு தோசை 1. சாம்பார், காய்கறி சாலட் 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.


முடி ஏன் உதிர்கிறது?






முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.
தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா? வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா? நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள். முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.
வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு மட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் அல்லது முடியியலார் ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.
இன்றைக்கு முடி கொட்டுவதைத்தடை செய்யக்கூடிய ஒரே மருந்து ரோகெய்ன் தான். இது வெளி நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மாத காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவு ரோகெய்ன் மருந்தின் விலை சுமார் ரூ. 5000/- ஆகலாம். முடியியல் துறையினர் உணவில் கவனம் செலுத்தச் சொல்வதுடன் ஓய்வு, அமைதி, உற்சாகம் போன்ற மனநிலை தொடர்புடைய செய்கைகளின் பயனையும் மிதமான உடற்பயிற்சியின் தேவை பற்றியும் குறிப்பிடுவார்கள்.
பல நேரங்களில் கீழ்க்கண்ட ஏதாவதொரு காரணத்தாலும் முடி கொட்டக் கூடும். ஆனால் இது தற்காலிகமானது தான். முயன்றால் தவிர்த்துவிட முடியும்.
இறுக்கமும், இழுவையும்:
முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு:
உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கின்ற போது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் முளைக்கும். கருவுற்றிருக்கும் காலத்தில் முடி கொட்டாமலிருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு உயர்ந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த பின்னர் முடி கொட்டுவதற்குக் குறைந்து விட்ட ஹார்மோன் காரணமாகிறது. ஆனால் இது ஐந்தாறு மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ சரியாகலாம். அதே போன்று நடுவயதுப் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்புக் குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.
சோகை / காய்ச்சல்கள் / கருத்தடை மருந்துகள்:
உடலில் இரத்தம் குறைவாக இருந்து சோகை நோய் காணப்பட்டாலோ, அல்லது டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் அடிபட்டு மீண்டிருந்தாலோ அன்றி வாய்வழி மற்றும் ஊசிவழிக் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி இருந்தாலோ முடி கொட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு, மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதானலாவது முடி கொட்டுகிறது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள்.
உணவு:
முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு கணிசமாகவே உள்ளது. பெண்கள் தங்கள் உணவு முறைகளை அடிக்கடி மாற்றுவதனாலும், அளவுக்குக் குறைவாக உண்பதாலும் உணவில் ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டக் கூடும்.
முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:
1. தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.
2. நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும், முடிக்கு தேவையான வைட்டமின் "சி" சத்துக்களையும் அளிக்கும்.
3. தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.
4. சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். மேற்கூறியவற்றுள் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு முறைகளை கையாளலாம்.

பெண்களும் சட்டமும்




கிராமத்தில் வாழும் ஒரு பெண் கிராம வாழ்க்கை பிடிக்காமல் பட்டணத்திற்குச் சென்றால் சுகமாக வாழலாம் என்ற எண்ணத்தில் பட்டணத்திற்கு புகைவண்டியில் பயணம் செய்கிறாள். பயணம் செய்யும் பொழுது வழியில் யாரோ ஒருவர் அவள் கொண்டு வந்திருந்த பணம் அனைத்தையும் திருடி விட்டார். புகைவண்டி நிலைய காவலர் ஒருவர் பார்க்கின்றார். அந்த பெண்ணைத் தன்னுடன் கூட்டிச் செல்கின்றார். திருமணம் முடித்துக் கொள்வதாகக் கூறுகின்றார். ஆறுதல் வார்த்தைகள் பேசுகின்றார். அந்த பெண்ணும் அவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். குழந்தையும் பிறக்கிறது. அதன் பிறகு பிரச்சனைகள் துவங்குகின்றன. அவன் விட்டுச் செல்கின்றான், அவள் பட்டணத்தில் ஆதரவு கொடுக்க ஆளின்றி துன்புறுகின்றாள். இது ஒரு உண்மை நிகழ்ச்சி. இங்கே இந்த குழந்தை சட்டப் பூர்வமான குழந்தையா? அவர்களது உறவை சட்டப்படி திருமண உறவு என்று ஏற்றுக் கொள்ள இயலுமா? பதில் வேண்டுமா? பதில் வேண்டுமா?
ஏழைக்குடும்பத்தில் பிறந்தவள் இவள். இவள் பெயர் கனகா. இவளுக்கு திருமணம் செய்து வைக்கப் பணம் இல்லையே என்று மிகவும் வருத்தத்துடன் இவளது பெற்றோர் இருக்கின்றனர். அங்கே வருகின்றான் பாலு, வரதட்சனை ஏதும் இன்றி கனகாவை மணந்து கொள்வதாகக் கூறுகின்றான், தான் ஒரு அரசு அலுவலர் என்றும் தெரிவிக்கினற்‘ன். இதை கனகாவின் பெற்றோர் நம்புகின்றனர். எளிய முறையில் திருமணம் நடந்து முடிகின்றது. இருவரும் பாலுவின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கே பாலு கனகாவை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்துகின்றான். கனகா மறுக்கிறாள், கொடுமைகள் ஆரம்பிக்கின்றன. ஒரு நாள் கனகா மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகிறாள். இவ்வாறான பல வகைப்பட்ட பிரச்சனைகளுக்கு சட்டம் என்ன தீர்வு கூறுகின்றது.
சட்டங்கள் எவ்வாறு தோன்றின?
ஒரு மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம்.
ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினார். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒரு வழி வந்த உறவினர்கள் ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர். பெண்கள் உணவு வகைகள் தேடிக்கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர். இவ்வாறு பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு படிப்படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? என்ன செய்யலாம்? இங்கே தான் சட்டம் உதவிக்கு வருகின்றது. இந்தப் பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட மதக் கோட்பாடுகளும் சட்டங்களும் பெரிதும் உதவின. "பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற நாட்டவனுக்கு உரியன உடையன" என்று மனுநீதி கூறுகின்றது.
ஒரு ஆண்மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்துவ மதம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை செய்து வைத்திருக்கின்றது. சட்டமும், கலாச்சாரமும் நெருங்கிய தொடர்புடையன. ஒன்றோடு ஒன்று. பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமைக் கலாச்சாரம்
தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்களும் பெண்களுக்குப் பெரிதும் எதிராகவே அமைகின்றன.பெண் சிசுக் கொலை :
"பெண் குழந்தைக் கொலை" என்பது பழங்காலந்தொட்டே, சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெற்று தலைவிரித்தாடும் ஒரு கொடுமையாகும். இன்று வரை அது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது என்பது ஒரு மறுக்க முடியாத யதார்த்தம். வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த காலத்தில் முதன் முதலாக "பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம்"
1870-ம் ஆண்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 119 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால்....? பெரிதாக என்ன மாற்றத்தைக் கண்டுவிட்டோம்? இன்றும் கிராமப்புறங்களில் இந்தக் கொடுமை பெரிதும் தலை விரித்தாடவில்லையா? இல்லை என்று நாம் நினைத்தால் அது அறிவீனம். நமது செய்தித்தாளைப் புரட்டினால் இன்றும் இச்செய்திகளைக் காணலாம். பெண் குழந்தைக்களுக்கான எமன்கள பல வடிவம் கொண்டு உல்லாச உலா வருகின்றன என்பதே உண்மை. என்னென்ன வடிவங்கள்....எருக்கம்பால், நெல்மணி (உயிரைக் காக்கும் உணவா? அல்லது பறிக்கும் எமனா? ) காப்பித்தூள், உப்பு .....இன்னும் எத்தனையோ? இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை தண்டிப்பதாக இருந்தால் தண்டனை மிகக் குறைவானது தான். இது கொலையல்லவா?.... இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை என்று கருதி ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ விதிக்காமல் இந்த அலட்சியம் ஏன்? சாவதும் அழிவதும் பெண் இனம் தானே?...கருவறை எமன்கள்:
இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் குழந்தைகளைக் கருவிலேயே சமாதி கட்டிவிட பல புதிய கண்டுபிடிப்புகளும் தோன்றிவிட்டன. கருவிலேயே ஒரு குழந்தையின் ஊனங்கள் அறியக் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த அறிவியல் பரிசோதனை இன்று பெண் குழந்தைகளின் கருவிற்கே எமனாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகள் மட்டிலும் 78,000 பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதி ஆகியிருக்கின்றன. இது பம்பாய், டெல்லி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் பெரும்பான்மையாக நிகழ்கின்றன. நம் நாட்டிலுள்ள மற்ற நகரங்களிலும், கிராமங்களிலும் அதிவேகமாக பரவி வருகின்ற இக்கொடுமையைத் தடுக்க என்ன செய்யப் போகின்றோம்?
1971-ம் ஆண்டு நமது அரசு கருக்கலைப்பை சட்டப் பூர்வம் ஆக்கும் வரையிலும் கருக்கலைப்பு என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒன்றாகவே இருந்தது.
1971-ம் ஆண்டுச் சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறுகின்றது.
1 கர்ப்பிணிப் பெண்ணின உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றாலோ,
2 பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்றவை பாதிக்கப்படும் என்றாலோ,
3 மருத்துவர் சரியென்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ, கருச் சிதைவு செய்யலாம்.
இன்று பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்க மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த சட்டத்தையே பயன்படுத்துகின்றனர். கருவுற்றிருக்கும் பெண் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தியும், அவள் கருவுற்றிருப்பதால் கருத்தடை செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் காரணம் காட்டுகின்றனர். இவ்வாறு இன்று பல்லாயிரக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து பெண் விடுதலைக் குழுக்கள் குரலெழுப்பின. இதனைக் கண்ட நமது மத்திய அரசு இக்கொடுமையைத் தடுப்பதற்காக சட்டங்களை அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநில பெண் விடுதலைக் குழுக்கள் தொடர்ந்து போராடியதால் மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆந்திர", அஸ்ஸாம், பீஹார், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து, மேற்கு வங்களாம், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்கள் இதைப் பற்றி கவலைக் கொண்டதாகவே தெரியவில்லை. கர்நாடகம், ஓரிசா, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதைக் கருத்தில் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வருகின்றது. முடிவெடுப்பது எப்போது? இந்தியா முழுவதும் ஒரே சட்டம் வருவது எப்போது?
மகாராஷ்டிரா மாநில குழந்தைப் பிறப்பின் முன் செய்யும் பரிசோதனைகளை முறைப்படுத்தும் சட்டம் - 1988.
1988-ம் ஆண்டு மே மாதம் 10-ம் நாள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது இந்த சட்டம்.
1 ஏற்கனவே இருக்கின்ற பரிசோதனை முறைகளை முறைப்படுத்துவதோடு நின்று விடுகின்றது.
2 குழந்தைப் பிறப்பதற்கு முன் பரிசோதனை செய்ய சில வரையறைகளைக் கொடுக்கின்றது. எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இந்தப் பரிசோதனையை மேற் கொள்ளலாம்?
அ.பெண் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்
ஆ.இதற்கு முன்பு 2 அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்
இ.ஆபத்து விளைவிக்ககூடிய மருந்து உட்கொண்டிருந்தால் அல்லது அபாயகரமான கதிர்கள் ஊடுருவக் கூடிய தொழிற்சாலைகளில் வேலை செய்தால்.
ஈ.பாராம்பரிய நோய்களினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினராக இருந்தால் இந்தப் பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்தலாம்.
3 ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட தனியார் பரிசோதனை கூடங்களை ஒழித்துக் கட்டாமல் அவற்றை முறைப்படுத்துகின்றது. அவை அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வழிவகுத்துக் கொடுக்கின்றது.
4 இதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகின்றது.
5 இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பெண்ணையும் (சமுதாய கட்டுப்பாடு அழுத்தம் இவற்றால் பரிசோதனையை செய்பவள்) மற்ற குற்றவாளிகளையும் கணவர், மாமியார், (பெண்ணைப் பரிசோதனையைச் செய்யக் கட்டாயப்படுத்துபவர்கள்), டாக்டர்கள், பரிசோதனைக் கூடத்தை நடத்துபவர்கள் போன்றவர்களையும் ஒரே மாதிரியாகப் பார்க்கின்றது; தண்டனைக் கொடுக்கின்றது. இதில் பெண் என்பவர் சமூக, குடும்ப, கலாச்சாரக் கட்டுப்பாடுகளினால் உருவான கட்டாயத்தின் பேரில் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்துபவள்; அவளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதென்பது எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய ஒன்றாகும்.
6 இந்த சட்டத்தின் கீழ் புரியும் குற்றம் பிணையில் விட முடியாத சமரசம் செய்ய முடியாத பிடி ஆணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாகும்.
இவ்வாறு ஆங்காங்கே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் விருப்பத்திற்கேற்ப பல ஓட்டைகளுடன் வெவ்வேறு சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே சட்டத்தைக் கொண்டு வருமாறு பெண்களும், சமூக நல விரும்பிகளும் இணைந்து குரலெப்பினால் நல்லது. இந்திய தண்டனைச் சட்டம் - 1860 பெண்கள் தொடர்பான பிரிவுகள் இந்த சட்டப்பிரிவுகள் அனைத்தையும் நோக்கினால் பெண், ஆண் என்பவரின் உடைமை, சொத்து என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன என்பது தெள்ள தெளிவாக விளங்கும்.
--------------------------------------------------------------------------------
ஆபாசப் புத்தகம், விளம்பரம்
பிரிவுகள் 292, 292 ஏ, 293, 294 என்ன சொல்கின்றன?
ஆபாசமான புத்தகம், விளக்கம், படம், ஒவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன. ஆபாச விளம்பரம் செய்வதை தடை செய்கிறது. ஆபாச செயல்கள், பாடல்கள், இவற்றை தடை செய்கிறது.
தண்டனை என்ன தெரியுமா?
பிரிவு 292 இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 292ஏ குறைந்த அளவு தண்டனை ஆறு மாதச் சிறைக்காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்படாமல் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 293 ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 294 மூன்று மாதங்கள் வரை சிறைக்காவல் அபராதம் அல்லது இரண்டும்.
1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்தது.
இன்று ஆபாச விளம்பரங்கள் இல்லையா? பாடல்கள் இல்லையா? செய்கைகள் இல்லையா? பெண்ணை அலங்காரச் சின்னமாகவும், போகப் பொருள்களாகவும் பார்த்தே பழகிவிட்ட இந்த கலாச்சார அமைப்பிலே சட்டங்கள் பெரிதாக என்ன செய்து விடும்
--------------------------------------------------------------------------------
பெண்ணை அவமதித்தல்
பிரிவு 354 :ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்றக் கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும்.
தண்டனை: இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
--------------------------------------------------------------------------------
கட்டாயத் திருமணம்
பிரிவு 366: ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று தெரிந்திருந்தும், கவர்ந்து செல்வது, அல்லது கடத்திச் செல்வது குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும்.
பிரிவு 366ஏ: பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை, பிறருடன் கட்டாயப் புணர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய புணர்ச்சிக்கு அந்தப் பெண் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அவளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்படி எந்த வகையில் தூண்டினாலும் குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும்.
--------------------------------------------------------------------------------
விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல்
பிரிவு 373 : பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை, எந்த வயதிலாவது விபச்சாரத்துக்கு அல்லது முறைகேடான புணர்ச்சி அல்லது வேறு சட்ட விரோத அல்லது ஒழுக்கக்கேடான செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய நிலைக்கு பலியாகலாம் என்று தெரிந்திருந்தும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்குப் பெறுவதும் அல்லது வேறு எந்த வகையிலாவது தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றமாகும்.
தண்டனை : பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும். இன்று இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள். இந்த சட்டங்கள் இருந்தும் இந்நிலைக்கு என்ன பதில் சொல்ல?
ஹசினா என்ற 9 வயது சிறுமி, பெங்களூர் நகரத்தின் ஒரு சுமாரான குடும்பத்தைச் சார்ந்தவள்: தந்தையைச் சமீபத்தில் இழந்து விட்டாள். அவளுடைய உறவினர் ஒருவர் அவளுக்கு வீட்டு வேலை ஒன்று வாங்கி தருவதாக வாக்களித்து பம்பாய்க்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே ஹசினாவை காமத்திபுரா (பம்பாயில் அதிகமாக விபச்சாரம் நடக்கின்ற இடம்) என்ற இடத்தில் விற்று விட்டார். இங்கே இந்த 9 வயது இளஞ்சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டாள்: பல இரவுகள் தொடர்ந்து இவ்வாறான கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாள். அவள் இந்தத் தொழிலை முற்றிலுமாக வெறுத்தாள். ஆனால் இதிலிருந்து தப்பித்துச் செல்வதற்குத் தான் வழி தெரியவில்லை. மெதுவாக அவள் போதைப் பொருட்களை எடுக்கும் பழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாள். இன்று அவள் போதை மருந்தை வாங்குவதற்காகப் பணம் ஈட்ட எதையும் செய்யத் தயார் என்ற நிலைக்கு ஆளாகி விட்டாள். இவ்வாறு இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளோ?
--------------------------------------------------------------------------------
பலாத்காரம் (வன்முறைப்புணர்ச்சி)
பலாத்காரம் என்றால் என்ன?
பிரிவு 375: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட 6 சூழ்நிலைகளில் உடல் புணர்ச்சிக் கொண்டால் பலாத்காரம் ஆகும்.
1 அவளுடைய விருப்பத்திற்கு மாறாக
2 அவளுடைய சம்மதமின்றி
3 அவருக்கு அல்லது அவளுக்க நெருக்கமான ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படம் என்ற அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தைப் பெற்று.
4 அவளுடைய சம்மதத்துடன் அந்த ஆள் தான் முழுமையாக அவளுடைய கணவன் இல்லையென்று தெரிந்த போதிலும் அந்தப் பெண்தான் அவளுடைய சட்டப்பூர்வமான மனைவி என்று நம்பியிருக்கும் போது.
5 அவளுடைய சம்மதத்துடன் - அந்த சம்மதம் புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும் போது பெறப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளில் அவளுடைய சம்மதத்தின் தன்மையையோ, விளைவுகளையோ அவளுக்கு புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பொழுது.
6 இவளுடைய சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக்கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்.
மதுரா வழக்கு மதுரா என்ற 15 வயது பெண் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு காவல் நிலையத்தில் இரு காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்தக் குற்றவாளிக் காவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் கீழ்கண்ட காரணங்களுக்காக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த பெண் எதிர்த்துப் போராடியதற்கான எந்த ஒரு அடையாளமும் அவளது உடலில் இல்லை .
அவள் உதவிக்கு யாரையும் கூச்சலிட்டு அழைக்கவில்லை .
ஏற்கனவே இவள் காதலுடன் உடல் புணர்ச்சிக் கொண்டிருக்கிறாள்
இதனைக் கேள்விக் கேட்டு எதிர்த்து பல பெண் விடுதலை இயக்கங்கள் குரல் எழுப்பின. போராடின இதன் விளைவாக 1983-ல் இந்தப் பிரிவில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த பிரிவு 376 சொல்கின்றது.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள நபர்களல்லாத பிறர் செய்யும் பலாக்காரத்திற்கு குறைந்த பட்சம் 7 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
1. போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
2. சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர்கள் பலாத்காரம் செய்தல்.
3 பெண்கள் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு உள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
4 கற்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
5 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
6 குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
இக்குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 10 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
இதை நாம் ஆழமாக சிந்தித்தால், விவாதித்தால் இது எந்த விதத்திலும் ஒரு பெண்ணின் உடலுக்கு எதிரான வன்முறை என்று கருதுவதே இல்லை என்பது புரியும். சமுதாயம் இதை ஆண்களின் கௌரவத்தைப் பாதிக்கும் ஒரு குற்றமாகவே பார்க்கின்றது.
--------------------------------------------------------------------------------
பிறர் மனை சேர்க்கை
பிரிவு 497 பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவளுடன் உடல் புணர்ச்சி செய்வது"பிறர் மனை சேர்க்கை" என்ற குற்றமாகும்.
முக்கிய அம்சங்கள்
1 கணவனுடைய அனுமதி இருக்கக் கூடாது.
2 இதன் கீழ் குற்றம் செய்யும் ஆண் மகன் மட்டும் தான் தண்டனைக்கு உள்ளாவான். பெண்ணை தண்டிக்க இயலாது.
3 பெண்ணின் கணவன் தான் புகார் செய்ய வேண்டும். இதில் நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் - கணவனுடைய அனுமதியோடு ஒத்துழைப்போடு மனைவி பிற ஆணுடன் உடல் புணர்ச்சி கொண்டால் அதை என்ன செய்வது? இவ்வாறு தானே பல ஆண்கள் திருமணம் என்ற பெயரில் "பெண்ணை" மணந்து கொண்டு விபச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மனைவிக்கு வயதானவுடன், இளமை போனவுடன் அழகு குறைந்தவுடன், இனிமேல் தொழிலுக்கு உதவாதவள் என்று கருதும் பொழுது என் அனுமதியின்றி இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டிருக்கிறாள் என்று கூறி அடித்துத் துரத்துகின்றனர். இதற்கெல்லாம் வழி வகுக்கின்றதே இச்சட்டங்கள்.பல பேரரசுகள், சாம்ராஜ்யங்கள் பெண்ணால் அழிந்தன என்று வரலாறு கூறுகின்றது. அவை பெண்ணால் அழிந்தனவா? அல்லது பெண்கள் மீது ஆண்கள் கொண்ட உடைமை உணர்வால் அழிந்தனவா? அதே உடைமை உணர்வு நமது சட்டங்களிலும் வெளிப்படையாகத் தெரிகின்றது.இந்த சட்டப் பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவினாலும் மக்களிடையே பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தண்டனை : ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்

காலணிகள் வாங்கும் முன்



நாம் உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் செலுத்தும் கவனத்தை, செருப்பைத் தேர்ந்தெடுப்பதில் காட்டுவதில்லை.
காலத்துக் கேற்ற உடைகள் மாதிரி காலணிகளும் உள்ளன.

செருப்பு வாங்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

மற்றவர்களின் காலணியைப் பார்த்து அது போல வாங்காதீர்கள்.

உங்கள் பாத அமைப்புக்கு ஏற்ப வாங்கவும். தட்டையான பாதம் உள்ளவர்களுக்கு எல்லா விதமான செருப்பும் எடுப்பாக இருக்கும். அதே நேரம் அகலமான பாதங்களை உடையவருக்கு, மிகப் பெரிதாக பெருவிரல் எலும்பு உள்ளவர்களுக்கு மூடிய காலணிகள் நல்லது.

சிலருக்கு தோல் காலணிகளால் அலர்ஜி ஏற்படும். அவர்கள் ஜோத்பூரி அல்லது கோலாபூரி செருப்புகள் அணியலாம்.
செருப்புகளின் எடை அதிகமாக இருக்கக் கூடாது.

தரமான செருப்புகளையே அணியுங்கள்.

வீடு மற்றும் வெளியே அணிந்து செல்லும் காலணிகளை தனித் தனியே வைக்கவும்.

அதிக நேரம் காத்திருக்க வேண்டிய இடத்துக்குப் போகும் போது அதிக உயரம் இல்லாத செருப்பை அணியவும்.

இதே போல இண்டர்வியூக்கு செல்லும் போது ஸ்ட்ராப் உள்ள செருப்புகளையே அணியவும்.

குளிர் காலத்தில் பாதத்தை ஒட்டிய படி இருக்கும் செருப்புகளையும், மழைக் காலத்தில் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணியவும். கோடைக் காலத்தில் காற்றோட்டமான செருப்பு அணியவும்.

வயதானவர்களுக்கு மென்மையான செருப்புகளை வாங்கிக் கொடுங்கள்.

ஃபேஷன் என்ற பெயரில் பார்க்கும் காலணிகளை யெல்லாம் வாங்க வேண்டாம். வாங்கும் செருப்பு எல்லா உடைக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும்.

மழைக் காலத்தில் செருப்பை வெளியில் உலர வைத்து பின்பு, பிளாஸ்டிக் சுவரில் அல்லது பிளாஸ்டிக் தாளில் மூடி ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவும்.

செருப்புகளை வாங்கினால் மட்டும் போதாது, அதை நெடு நாள் வரை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.
தோல் மற்றும் துணி வகைகளில் ஆன செருப்புகள் நீண்ட நாள் உழைக்காது.

தோலில் ஆன செருப்புகள் மற்றும் சேண்டல் வகை செருப்புகளுக்கு அடிக்கடி பாலிஷ் போடவும். இதனால் இதன் அழகு கூடுவதோடு அதன் ஆயுளும் கூடுகிறது.

காலணிகளை அடுக்கி வைக்க கடை வீதியில் வித விதமான ஷூ ரேக் மற்றும் ஷூ பைகள் கிடைக்கின்றன.
பட்டு, வெல்வெட்டு போன்ற செருப்புகளை பழைய பருத்தித் துணியால் சுற்றி வைக்கலாம். நாடா உள்ள, சரிகை மற்றும் கண்ணாடி வைத்த செருப்புகளையும் இப்படி வைக்கலாம்.

வாங்கிய செருப்புகளை அதிக நாள் பயன்படுத்தாமல் வைக்காதீர். இற்றுப் போகும். அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் தான் அதிக விலை கொடுத்து செருப்புகளை வாங்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

நகைகள் பளபளக்க!



தங்கம் அழகை உயர்த்துவது மட்டுமல்ல...

உங்கள் வாழ்க்கைத் தரத்திற்கான ஒரு அடையாளமாகவும் மாறிவிட்டது.
தங்கத்தை விரும்பாத மங்கையர் யாருமில்லை. தங்க நகைகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். உங்கள் நகைகளைப் பாதுகாக்க இதோ நாங்கள் தரும் சில டிப்ஸ்!
நகைகளை அணியும் முன்பே மேக்-அப் செய்து கொள்ளவும். ஏனெனில், பவுடர் மற்றும் ரூஜின் சிறு துளி கூட தங்கத்தின் பளபளப்பைக் குறைத்து விடும்.
ஸ்ப்ரே செண்ட், நகப் பூச்சு படாமல் நகைகளை பார்த்துக் கொள்ளவும்.
முத்துக்கள் மீது நகப் பூச்சு பட்டால் முகத்தின் மேல் பகுதி சிதைந்து விடும்.

எப்படி சுத்தம் செய்வது?
மிருதுவான பருத்தித் துணியையோ அல்லது கடைகளில் விற்கும் மினரல் வாட்டரையோ பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை சோடா பை கார்பனேட் போட்டு அதில் தங்க நகைகளைப் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து மென்மையான துணியால் துடைக்கவும். நகை பளபளப்பாகும்.
தங்கம் மற்றும் கலா ரசனையான பொருட்களைக் கூட மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்.
செய்யக்கூடாதது ...
நகைகளை சிறிய டப்பாக்களில் போட்டு வைக்காதீர்.
பிற உலோக நகைகளை தங்கம் மற்றும் வெள்ளி நகையோடு சேர்த்து வைக்காதீர்.
சொக்கத் தங்க நகைகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட, நகையை கொதிக்கும் நீரில் போடாதீர். நல்ல பருத்தி துணிக் கொண்டு சுத்தம் செய்யவும்.
நகைகளை சுத்தம் செய்ய சோப் - சர்ஃப் பவுடர் மற்றும் டூத்பேஸ்டை உபயோகிக்காதீர், குளோரின் தங்கத்தின் மேல் பகுதியை பாதிக்கும்.
குறிப்பு :
நகைகளை வெல்வெட் மற்றும் சாட்டின் லைனிங் செய்யப்பட்ட டப்பாக்களிலேயே வைக்கவும்.
தனித்தனி டப்பாக்களில் அவற்றை வைப்பது சிறந்தது.
ஒவ்வொரு நகையையும் பயன் படுத்துவதற்கு முன்பும் பின்பும் தூய்மையான துணியால் துடைக்க மறக்காதீர்.
நகைகளை பீரோவில் வைப்பதற்கு முன்பு, ட்ரேசிங் பேப்பரால் சுற்றி பிறகு துணிகளால் சுற்றி வைக்கவும், பிங்க் நிற ட்ரேசிங் பேப்பர், அலமாரியின் துருவில் இருந்து நகையைப் பாதுகாக்கும்.

அழகுக்கலை கற்க...



பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க மிக எளிய வழி...
அழகுக் கலை பயில விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற அழகுக்கலை பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறுவதுதான் புத்திசாலித்தனம். அதுவும் அழகுக் கலையில் பல ஆண்டு அனுபவமுள்ளவர்களிடம் பயின்றால் முழுமையான பயிற்சியை மிக விரைவில் பெற்று சிறந்து விளங்க முடியும்.
அழகுக்கலையை பயில்வதற்கு கல்வித்தகுதி அவசியமே இல்லை. சிறிது அழகுணர்ச்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். அழகுக்கலை நிபுணர்கள் அத்தனை வகையான டெக்னிக்கையும் மிக சிம்பிளாகச் சொல்லித் தருகிறார்கள்.
பியூட்டி பார்லர் திறக்கக் கடன் வசதி கூட பெற்றுத் தரப்படுகிறது. இப்போதெல்லாம் நிறைய பெண்கள் வேலைக்குப் போக தொடங்கி இருப்பதால், அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள நேரம் இருப்பதில்லை. அதனால்தான் சமீப காலமாக அவர்கள் அழகு நிலையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிடும். அப்போது அழகு நிலையங்களும், அழகுக் கலை நிபுணர்களும் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.
ஆகவே நீங்கள் ஒரு வேளை வீட்டில் முடங்கி இருந்தால் இந்த சுயதொழிலை கற்று முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்.



'ஹேர் டை' உபயோகிக்க...



Hair Dye - Tips - Child Care Tips and Informations in Tamil
"ஹேர் டை" எல்லாருக்குமே சரிபட்டு வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். "ஹேர் டை"களில் கூட கெமிக்கல் கலக்கிறார்களாமே? "ஹேர் டை" உபயோகிக்கலாமா, கூடாதா?

"கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல, கூந்தலுக்குச் சாயம் பூசுவதும், காப்பிய காலத்திலேயே இருந்திருக்கிறது. அப்போது, வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை. அதற்கு நேரமும் இல்லை.

இயற்கை, கெமிக்கல், அக்ரிலிக் என்று மூன்று வகையான "ஹேர் டை"கள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால், இதைப் பயன்படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும். கெமிக்கல் மற்றும் அக்ரிலிக் "ஹேர் டை"களில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால், முகம், கண், புருவம், எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும்.

இப்படி அலர்ஜி ஏற்பட்டால், ஒன்றும் செய்ய முடியாது. அந்த ப்ராண்டைத் தவிர்த்து வேறு ப்ராண்ட் மாற்ற வேண்டியதுதான். அலர்ஜி மாற்ற வேண்டுமே தவிர விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. மேலும் ஹெர்பல் "ஹேர்டை" கள் கெமிக்கலைவிட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில், நிறத்துக்காகச் சில கம்பெனிகள் கெமிக்கல் கலக்கின்றன.

அதற்காக "ஹேர் டை" உபயோகிக்கவே கூடாது என்றில்லை. ஆனால் அளவாக உபயோகிக்க வேண்டும். "ஹேர் டை" போடுவதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்கு தள்ளிப் போடலாம். எந்த ஒரு "ஹேர் டை" வாங்கினாலும் அதிலிருந்து ஒரு துளி எடுத்து, காதின் பின்புறம் வைத்து இரண்டு மணி நேரம் விட்டு, ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா என்று பார்த்து ஒரு பிரச்னையும் இல்லையெனில் உபயோகிக்கலாம்.

நகைகள் வாங்க போறீங்களா....



To buy jewels... - Child Care Tips and Informations in Tamil
நகைகள் வாங்கும்போதும், வாங்கிய பின்னும் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் இதோ:
* நகை வாங்கச் செல்லும் முன், எந்த நகை வாங்கப் போகிறோம் என்பதை உறுதி செய்த பின் கடை படி ஏறுங்கள்.
* உங்கள் "பட்ஜெட்" என்ன என்பதில் தெளிவாய் இருக்க வேண்டும்.
* "ஹால் மார்க்" முத்திரை போட்ட நகைகளையே வாங்க வேண்டும்.
* பழைய நகைகளில் கல் வைத்த நகையைப் போட்டு விட்டு புதிதாக வாங்க வேண்டும் என்று நினைத்தால், கற்களை எடுத்த பின் எடை போட்டு, அதற்கேற்ற விலையில் புதிய நகைகளை வாங்குங்கள்.
* செய்கூலி எவ்வளவு சதவீதம், சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* சரியான ரசிது கொடுக்கப்படுகிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
* அணிவதற்காக நகை வாங்கப் போகிறீர்களா? அல்லது முதலீடு செய்யும் முயற்சியா? முதலீடு என்றால், தங்கக் காசாக வாங்கி வைத்துக் கொள்வது தான் சிறந்தது.
* நகை வாங்கக் கிளம்பும் முன், தங்கத்தின், வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* தரமான கடைகளில் நகை வாங்குங்கள். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் கடைகளில் வாங்கினால் தரம் குறையும். பிறகு வருந்த வேண்டாம்.
* கே.டி.எம்., நகைகள் என்பன தனியாகத் தயாரிக்கப்படுபவை. நீங்கள் வாங்கும் நகை எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ரசிதில் இது குறித்த தகவல் எழுதப்பட வேண்டும்.
* நகைகளை வாங்கியவுடன், அதைப் புகைப்படம் எடுத்து வைத்து விடுங்கள்.
* நகைகளை "இன்சூர்" செய்வது மிக மிக முக்கியம். இதெல்லாம் சற்று சிரமமான வேலைகள் தான். ஆனாலும் விடாதீர்கள். செய்து வைத்து விடுங்கள். ஆபத்துக்கு உதவும்.
* வாங்கிய நகைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். நகைகளை அணிவதற்கு முன்னதாகவே, பவுண்டேஷனோ, பவுடரோ போட்டுக் கொள்ளுங்கள். நகைகளை அணிந்த பின் இவற்றைப் பூசிக் கொண்டால், நகைகள் பொலிவிழந்து விடும்.
* நகைகளைக் கழற்றி பத்திரப்படுத்தும்போது வெல்வெட் துணியில் போட்டு வைப்பது நல்லது. வெறும் டப்பாக்களில் போட்டு வைத்தால் கீறல்கள் விழுந்து பொலிவு கெடும்.
* ஒவ்வொரு நகையையும் தனித்தனி டப்பாக்களில் போட்டு வைத்தால் புத்தம் புதிதாக ஜொலிக்கும்.
* நிரந்தரமாக அணிந்து கொள்ளும் நகைகளை வாரந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். "மைல்டு ஷாம்பு"வில், மென்மையான பிரஷ்ஷைத் தோய்த்து பத்திரமாக நகைகளைத் தேய்த்துக் கழுவினால் நகைகள் "பளிச்" சென்றிருக்கும்.

வெற்றி சிந்தனைகள்



Thoughts for victory - Child Care Tips and Informations in Tamil
காலத்தைக் கவனமாகக் கையாளுவோம்!
காலத்தின் பெருமையையும், எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நீங்கள் உணர வேண்டும்.
"எனக்கு நேரமே சரியில்லை!" என்று புலம்புகின்ற மனிதர்கள் சிலர். "என்றைக்கு நல்ல காலம் பிறக்குமோ!" என்று பெருமூச்சுவிடுபவர் சிலர்.
"நேரமும் காலமும் வந்து ஒண்ணா சேர்ந்திடுச்சிண்ணா நடக்கிறதெல்லாம் நல்லபடியாக நடந்திடும்" என்று நல்ல நேரத்துக்காக சோதிடர்களிடம் நாள் நட்சத்திரம் பார்க்கச் செல்லுபவர்கள் சிலர்.
இப்படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல்தான் "நேரம் - காலம் - Time"
இவ்வாறு காலத்தின் பெருமை பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டாலும் நம்மில் பலர் காலத்துக்கு உரிய மதிப்பளிக்காமைக்குக் காரணம் காலத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாமைதான்.
"என்ன செய்வதென்றே தெரியவில்லை"
"சே! ரொம்ப சலிப்பாக இருக்கிறது"
"இப்ப போனா போகட்டும்; பிறகு பார்த்துக்கலாம்!"
"என்றைக்காவது ஒருநாள் வராமலா போய்விடும்!"
இப்படியெல்லாம் பேசி, காலத்தை வீணடிப்பவர்களும் உண்டு. நாமும் அவர்களை போல் இல்லாமல் காலம் பொன்போன்றது என்று நினைத்து காலத்தை கவனமாக கையாளுவோம். அவ்வாறு காலத்தைக் கவனமாகக் கையாள வேண்டுமானால் அதற்கான 10 கட்டளைகள்.
1. வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டொழியுங்கள்.
2. சோம்பேறிகள், சுகவாசிகள், வேறு வேலையில்லாதவர்களோடு பழகாதீர்கள்.
3. வாழ்க்கைக்குப் பயன்தராத புத்தகங்களைப் படிக்காதீர்கள்.
4. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த நிகழ்ச்சிகளை மட்டும் கேளுங்கள் - பாருங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள் - நாளைய வேலையைக்கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்; ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.
6. செய்யக்கூடிய வேலையை முக்கியமானவை, அவசரமானவை, வழக்கமானவை, ஒன்றுக்கும் உதவாதவை எனத் தரம் பிரித்து, கிடைக்கும் நேரத்தில் வரிசைப்படி செய்து முடியுங்கள்.
7. எந்த வேலையையும் இதற்குள் முடிப்பேன் என்று ஒரு காலக்கெடு வைத்து அதற்குள் முடிக்க முயற்சியுங்கள்.
8. நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும்? யாரைச் சந்திக்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பதை இன்றைக்கே குறித்து வையுங்கள்.
9. உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.
10. நல்ல ஓய்வு எடுங்கள். போதிய உறக்கம் தேவை. தியானம் செய்யுங்கள்.